செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்று மாலை பாலாற்றில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீருக்குள் மூழ்கியதில் மாயமாகிவிட்டனர். அவர்களை இன்று காலை வரை தீயணைப்பு படையினர் படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு அருகே பாலூர் கிராமம், வணிகர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சஞ்சய் (16). இவர் பத்தாம் பொது தேர்வில் தேர்ச்சி பெறாததால், அங்குள்ள தனியார் டூடோரியல் மூலம் தனித்தேர்வு எழுதுவதற்கு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகன் சஞ்ஜய் (17). இவர், அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்திருக்கிறார். இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், நேற்று மாலை பாலூர் அருகே உள்ள பாலாற்றுக்கு 2 நண்பர்களும் சென்றனர். பின்னர் இருவரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், இருவரின் பெற்றோரும் விசாரித்தபோது, 2 மாணவர்களும் பாலாற்றில் குளிக்க சென்றிருப்பது தெரியவந்தது. இருதரப்பு பெற்றோரும் பாலாற்றங்கரைக்கு சென்று பார்த்தனர். அங்கு 2 மாணவர்களின் உடைகள் மட்டும் கிடந்தன. ஆற்றுக்குள் 2 மாணவர்களையும் காணவில்லை. அவர்கள் நீண்ட நேரம் அப்பகுதி மீனவர்கள் மூலம் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்ததும் பாலூர் போலீசாரும் செங்கல்பட்டு தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் நேற்று நள்ளிரவு வரை தீயணைப்பு படையினர் படகு மூலம் ஆற்றில் மூழ்கி மாயமான 2 மாணவர்களையும் வலைவீசி தேடியும் கிடைக்கவில்லலை. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் 2 மாணவர்களையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு 2 மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.