நொய்டா: ”கால்நடைகளுக்கு வேகமாக பரவும் தோல் கழலை நோயை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன,” என, பிரதமர் மோடி கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச பால் பண்ணை தொழில் கூட்டமைப்பின் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில மாதங்களாக நம் நாட்டின் பல மாநிலங்களில், ‘லும்பி ஸ்கின்’ என, அழைக்கப்படும் தோல் கழலை நோய் கால்நடைகளுக்கு வேகமாக பரவுகிறது.
கால்நடைகள் பலி
இந்த நோய் பாதிப்பு ஏற்படும் கால்நடைகளின் தோலில் கட்டி ஏற்பட்டு, காய்ச்சல் அடிக்கும். நோய் நீடித்தால் கால்நடைகள் பலியாகும் அபாயம் ஏற்படும். கடந்த சில மாதங்களில் இந்த நோய்க்கு ஆயிரக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன.இந்த நோயை கட்டுப்படுத்தவும், நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக நம் விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். 2025க்குள் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பால் பண்ணை தொழில் தொடர்பான மிகப் பெரிய தகவல் கட்டமைப்பு வசதியை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கால்நடைகளை ‘பயோமெட்ரிக்’ வாயிலாக அடையாளம் காணும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநாடு
இதற்கு, ‘பசு ஆதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாககால்நடைகளின் ஆரோக்கியத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பால் பொருள் தொழில் துறையை விரிவுபடுத்தவும் முடியும்.உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பால் பொருள் தொடர்பான கண்காட்சிக்கும் இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement