செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சோமமங்கலம் நடுவீரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி லெனின். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் உள்ளது. அதேபோல் இவரது தம்பி நரேஷ்பாபு என்ற ஆலன் ஜான்சன் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் நரேஷ்பாபுக்கும் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த காலின் ஹேனா செரின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இவர்களின் எதிரியான மேத்யூ, சச்சின் என்ற ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளனர். கடந்த ஆண்டு இவர்களுக்கும் லெனின் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் லெனின் தரப்பினர் மேத்யூவின் நண்பர் அபிஷேக் என்பவரின் தலையை வெட்டிக் கொலை செய்தனர்.
இதற்கு பழிக்குப் பழியாக ’லெனின் தம்பி நரேஷ்பாபு தலையை திருமணத்தன்று வெட்டி எடுத்து அபிஷேக் தலை கிடந்த அதே இடத்தில் வைப்போம்’ என ரவுடி மேத்யூ கூட்டாளிகள் சபதமிட்டுள்ளனர்.
இந்த தகவல் தாம்பரம் சரக கிரைம் போலீசாருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மேத்யூ கூட்டாளிகள் அருவா, கத்தி, போன்ற ஆயுதங்களுடன் மாறு வேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்றே பதுங்கி விட்டதாக போலீசாருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது.
இதன் காரணமாக திருமண வரவேற்பின் போது ரவுடிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மோதலை தடுக்கும் வகையில் நரேஷ்பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.