குடும்பம் நடத்த வர மறுத்ததால் காதல் மனைவி குத்தி கொலை: திருமண நாளில் சோகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவை சேர்ந்தவர் அருள்(49). இவரது மனைவி ரேவதி(45). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து 25 ஆண்டுகளாகிறது. தீபன்ராஜ் என்ற மகனும், மகாரத்யா என்ற மகளும் உள்ளனர். பேருந்து நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் அருள் மது போதைக்கு அடிமையானவர். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் வீட்டு செலவுக்கு அருள் பணம் கொடுப்பதில்லை.

இதனால் மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து குழந்தைகளை ரேவதி படிக்க வைத்துள்ளார். தீபன்ராஜ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பெரம்பலூரில் உள்ள ஒரு கல்லூரியில் மகாரத்யா படித்து வருகிறார்.தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவரை பிரிந்து கடந்த ஓராண்டாக கூறைநாடு விஸ்வநாதபுரத்தில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் மகன், மகளுடன் ரேவதி வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது திருமண நாளான நேற்று ரேவதி வீட்டுக்கு வந்து, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அருள் அழைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது வீட்டில் உள்ள தனது பொருட்களை தருமாறு ரேவதி கேட்டார். அதற்கு அருள் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அருள் வீட்டுக்கு 2 பேரும் நேற்று சென்றனர். அருள் வீட்டுக்கு அருகே காமராஜர் சாலையில் சென்றபோது 2 ேபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அருள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தி விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த ரேவதி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி இறந்தார். இதுகுறித்து ரேவதியின் தாய் மல்லிகா அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிந்து அருளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.