பணத்தை கொடுத்து விட்டு சென்ற அதிகாரிகள்: எஸ்.பி.வேலுமணி தகவல்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்றது. கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடப்பது பற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் வெளியாகி, அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சோதனைக்கு வந்த வருமான வரித்துறையினர் தனது வீட்டில் எதையும் கைப்பற்றவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியல் பழி வாங்களின் உச்ச கட்டத்தை திமுகவினர் செய்கின்றனர். மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த சோதனை நடைபெற்றது.” என குற்றம் சாட்டினார்.

கடந்த இரண்டு முறை நடைபெற்ற எதுவும் கைபற்றப்படவில்லை என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, மூன்றாவது முறையான இன்றும் எதுவும் கைபற்றப்படவில்லை. எனது வீட்டில் இருந்து ரூ.7500 பணத்தைதான் கைப்பற்றினார்கள் அதனையும் திருப்பி கொடுத்து விட்டார்கள். வழக்கம் போல டேபிள், சோபாவை புகைப்படம் எடுத்து சென்று விட்டனர் என தகவல் தெரிவித்தார். எல்.இ.டி விளக்குளால் மின் பயன்பாடு குறைவு தான் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான டெண்டர்கள் முறைப்படியே நடந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஸ்டாலின் குடும்பம் தமிழ் நாட்டையை சுரண்டி எடுக்கிறது 5000 கோடி ரூபாய் முறைகேடாக திமுகவினர் குடும்பங்கள் சம்பாதித்து உள்ளனர் எனவும் எஸ்.பி.வேலுமணி அப்போது குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.