சென்னை, மதுரை, திருச்சியில் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

மதுரை: லண்டனில் கர்னல் பென்னிகுக் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பிய அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுக்கிற்கு நினைவு மண்டபம் இருந்தாலும், லண்டனில் அவருக்கு சிலை வைத்து பெருமை சேர்த்துள்ளார் தமிழக முதல்வர். அந்நாட்டு மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை, மதுரை, திருச்சி மக்களின் தாகத்தை தீர்க்க நிறைய தடுப்பணைகளை கட்ட முதல்வர் முடிவு செய்துள்ளார். அதனை வருங்காலத்தில் நிச்சயமாக கட்டி முடிப்பார். மக்களின் வரிப்பணம் தான் மத்திய அரசுக்கு செல்கிறது. மாநிலத்தில் உரிமைகள் எப்போதும் போல் இருக்க வேண்டும். மத்திய அரசிற்கு எவ்வளவு செல்கிறது என்ற வரி விகிதாச்சாரத்தை விரிவாக சொல்ல நான் விரும்பவில்லை. பொருட்கள் விலையேற்றம் அடைந்தாலும் ரேஷனில் பழைய விலையில் கொடுக்க வேண்டும் என்று அரசு முழுமையாக ஈடுப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பகுதி நேர நியாய விலை கடைகள் எவ்வளவு திறக்கப்பட வேண்டும். புதிதாக கட்டப்பட வேண்டியவை எத்தனை என கணக்கிடப்பட்டு அவை உள்ளாட்சித்துறை நிதியிலிருந்து ஒதுக்கி பணிகள் மிக விரைவாக நடைபெறும். 10,000 பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.