'தென் கொரியாவாக மாறும் மேற்கு வங்கம்' – மம்தாவை சாடிய எதிர்கட்சித் தலைவர் கைது; கலவர கோலத்தில் கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள ‘நபன்னா’-என்றழைக்கப்படும் மேற்கு வங்க தலைமை செயலகத்தை பாஜகவினர் பேரணியாக சென்று, இன்று முற்றுகையிட முயன்றனர். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஊழலில் திளைப்பதாக குற்றஞ்சாட்டி, அரசை எதிர்த்து இந்த முற்றுகைப் போராட்டத்தை பாஜக முன்னெடுத்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக மக்களவை உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் முன்னிலையில் இந்த முற்றுகை பேரணி நடைபெற்றது.  சுவேந்து அதிகாரி சந்த்ராகாச்சி பகுதியில் இருந்து பேரணியை வழிநடத்தினார். கொல்கத்தாவின் பல பகுதிகளில் இருந்தும் பாஜகவினர் பேரணியாக வந்தனர். அப்போது, பாஜகவினர் சட்டப்பேரவைக்கு அருகாமையில் உள்ள இரண்டாவது ஹூக்லி பாலம் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், சுவேந்து அதிகாரி, லாக்கெட் சாட்டர்ஜி, ராகுல் சின்ஹா ஆகியோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது,’மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தை தென் கொரியாவாக மாற்றியுள்ளார்’ என சுவேந்து அதிகாரி முழக்கமிட்டார். மேலும் அவர்,”முதலமைச்சர் மம்தாவிற்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை. எனவே, அவர் தென் கொரியாவை போல வங்கத்திலும் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுகிறார். போலீசார் அவர்கள் செய்யும் அனைத்திற்கும் ஒருநாள் பதிலளிக்க வேண்டும். அடுத்தது பாஜகதான் வர இருக்கிறது” என்றார். 

ஹோவ்ரா பாலம் அருகே, மோதலில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும், நீரை பாச்சியும் கலைக்க முயன்றனர். அதை தொடர்ந்து, அங்கு போலீசாரின் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால், மோதலில் ஈடுபட்ட பாஜகவினர் பலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்காக 7 ரயில்களை பாஜகவினர் தயார் செய்தனர். வடக்கு வங்கத்தில் இருந்து 3 ரயில்கள், தெற்கு பகுதியில் இருந்து 4 ரயில்கள் ஆகியவற்றில் தொண்டர்களை அக்கட்சியினர் அழைத்து வந்துள்ளது. மேலும், கொல்கத்தாவிற்கு வெளியேவே பாஜகவினர் வந்த பேருந்துகளை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.