இலங்கையின் புலம்பெயர் பணியாளர்கள், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 அல்லது 0112 582 447 ஆகிய இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி
புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியை பெற்றிருந்தார்.
அதன்படி, 2022 மே 1ஆம் திகதி முதல் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை அதிகாரப்பூர்வ முறைகளின் ஊடாக மூலம் 3,000 டொலர்களை அனுப்பிய புலம்பெயர்ந்த பணியாளர்கள், அனுப்பப்பட்ட தொகையை விட 50 சதவீதம் குறைவான மதிப்புள்ள மின்சார உந்துருளியை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும்.
அதேநேரம் 20,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் மின்சார சிற்றூந்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்கள்
உரிய வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள், தற்போது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய அனைத்து ஆவணங்களுடன் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சு கோரியுள்ளது.