களக்காட்டில் பரபரப்பு; வனத்துறை அதிகாரியை கண்டித்து மீண்டும் போஸ்டர்: நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

களக்காடு: களக்காட்டில் வனத்துறை அதிகாரியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனராக ரமேஷ்வரன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்தும், அவரை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் களக்காட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்து சர்வ கட்சி கூட்டமைப்பு என்ற பெயரில் மற்றொரு போஸ்டரும் ஒட்டப்பட்டது.

இதனால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் களக்காடு நகர் முழுவதும் மீண்டும் வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிராக சமூக குற்றங்களில் ஈடுபடும் வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரனை பணி நீக்கம் செய்ய வேண்டும்,

பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 14ம்தேதி (புதன்) களக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் களக்காட்டில் வாழைத்தார் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பித்த முதல்வருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் களக்காட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.