மதுரை: பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தமிழக உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொட்டுலுபட்டியை சேர்ந்த தனபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகளின்படி கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம், வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கொலை வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக உள்துறைச்செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.