அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

செப்டம்பர் 15ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை  மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும்  மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப்  பிரிவு  மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில்  ஈடுபாடு  மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு  வருகின்றன.

இந்த ஆண்டு, காவல்துறையில் முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில்  ஊர்க்காவல் படைவீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும்,  விரல்ரேகைப்  பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும்  மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.