ரஷ்ய அதிபரை கொல்ல முயற்சி| Dinamalar

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்து, இன்று வரை நீடித்து வருகிறது. போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்நிலையில், புடினை கொல்ல முயற்சி நடந்ததாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ‘ஈரோ வீக்லி நியூஸ்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சென்ற காரின் முன்பக்க இடது சக்கரம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இருப்பினும், புடினின் கார் நிலைமையை சமாளித்து வேகமாக சென்று விட்டது. இந்த தாக்குதலில், புடினுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய படைகளின் தாக்குதலால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்ட பின் நேற்று அதிகாலை, கீவ் நகருக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது கார் மற்றொரு காருடன் மோதியது. இந்த விபத்தில் ஜெலன்ஸ்கி, டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முதலுதவிக்கு பின் ஜெலன்ஸ்கி ஆம்புலன்சில் கீவ் நகரை வந்தடைந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.