விடாது துரத்தும் ரெய்டு – மணீஷ் சிசோடியா தலைக்கு மேல் கத்தி…?

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் 40 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை ரத்து செய்யப்பட்டு, பழைய மதுபானக் கொள்கை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம், புகார் அளித்தது. இதை பரிசீலித்த ஆளுநர், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில், சிபிஐ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக சோதனை நடத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதில், முதல் நபராக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத், பெங்களூரு, சென்னை, நெல்லூர் உள்ளிட்ட நகரங்களில், இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

நெல்லூர் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் மற்றும் டெல்லி -என்சிஆர் ஆகிய நகரங்களில் உள்ள மதுபான வணிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பல நகரங்களில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.