“மோடி அரசின் சாதனைக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது வேடிக்கையாக இருக்கிறது!'' – அண்ணாமலை

“மத்திய அரசின் ஆட்சியும், அதிகாரமும் தங்கள் கையிலிருந்த போதும், மத்திய அரசில் அங்கம்வகித்த போதும், கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும், நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட தி.மு.க, பிரதமர் மோடி அவர்களின் நடவடிக்கையால் மத்திய அரசு செய்த சாதனைக்கு வழக்கம் போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வாடிக்கையாக இருக்கிறது” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள்… மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தனர். பலகாலமாக இவர்கள் கொடுத்து வந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக கிடப்பில் போடப்பட்டன.

அண்ணாமலை

இந்த நிலையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பா.ஜ.க கட்சி அலுவலகத்துக்கு வந்து தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக் கூறினர். இதைத் தொடர்ந்து 40 ஆண்டுக்காலமாக போராடியும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசு அவர்களை உதாசீனப்படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக் கூறினர்.

மத்திய அரசின் ஆட்சியும், அதிகாரமும் தங்கள் கையில் இருந்தபோதும், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும், இந்த மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட தி.மு.க, பிரதமர் மோடி அவர்களின் நடவடிக்கையால் மத்திய அரசு செய்த சாதனைக்கு வழக்கம் போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி

இதனையடுத்து, பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்துக்கும் மத்திய அரசின் எஸ்.டி பிரிவினரின் பதிவாளர் கவனத்துக்கும், இந்த மனுக்களைக் கொண்டு சென்று நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தமிழ்நாடு பா.ஜ.க-வால் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.