அடம் பிடிக்கும் அசோக் கெலாட் – டஃப் கொடுக்கும் சச்சின் பைலட்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், ராகுல் காந்தி போட்டியிட மறுத்து விட்டார். அவரை சமாதானம் செய்து போட்டியிட வைக்கும் முயற்சியில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, மூத்தத் தலைவர்கள் சசி தரூர், அசோக் கெலாட் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவருக்கும், சோனியா காந்தியும் ஓகே சொல்லி உள்ளார். விரைவில், சசி தரூர், அசோக் கெலாட் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என, அம்மாநில எம்எல்ஏக்களிடம், முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.

அண்மையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேசிய அவர், தான் எங்கேயும் செல்லவில்லை என்றும், ராஜஸ்தான் மக்களுக்கான தனது பணி தொடரும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க, முதலமைச்சர் அசோக் கெலாட் தயாராக இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சச்சின் பைலட், காங்கிரஸ் கட்சியில், ஒரே சமயத்தில், இரண்டு பதவிகளை ஒருவர் வகிக்க முடியாது என குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.