தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21.09.2022, 22.09.2022, 23.09.2022 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
24.09.2022 மற்றும் 25.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னைக்கான வானிலை அறிக்கை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21.09.2022 முதல் 23.09.2022 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழககடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
பா. செந்தாமரை கண்ணன்
இயக்குனர்
தென் மண்டல தலைவருக்காக,
மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை.