ஹெராயின் கடத்திய கேரள நபர் கைது

மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ௧௬ கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருளை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு, ஹெராயின் போதைப் பொருளுடன் கேரள நபர் ஒருவர் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என்பவரிடம் சோதனையிட்டனர். இதில், அவரது பெட்டியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ௧௬ கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. பினு ஜானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘வெளிநாட்டினர் ௮௨ ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாகக் கூறியதால், ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டேன்’ என்றார். கடத்தலில் ஈடுபட்ட தன் கூட்டாளிகளின் பெயர்களையும் அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து, புதுடில்லியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, கேரளாவின் கொச்சி கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் வந்த படகை நிறுத்தி, கடற்படையினர் சோதனையிட்டனர். அதில், ௨௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தப்படுவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர், பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவரை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.