பாலக்காடு: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்காரா நகரிலிருந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு கேரள அரசுப் பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. இரவு 11.30 மணியளவில் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து மீது பின்னால் சென்ற தனியார் பள்ளியின் சுற்றுலா பேருந்து மோதியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு கூறும்போது, “அரசுப் பேருந்து மீது மோதியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் சுற்றுலா பேருந்து என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 5 பள்ளி மாணவர்கள், ஒரு ஆசிரியர் மற்றும் அரசுப் பேருந்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். அதிவேகத்தில் சென்ற பள்ளி சுற்றுலா பேருந்து காரை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.