கொல்கத்தா: வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின்போது வழிபட்ட துர்கா தேவி சிலைகளை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதன்படி மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் மால் பஜார் என்ற இடத்தில் துர்கா சிலைகளை மால் ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 40 பேர் மீட்கப்பட்டனர். 8 வயது சிறுவன், 13 வயது சிறுமி உட்பட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் காணாமல்போன பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். முதல்வர் மம்தாவும்ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.