சென்னை: தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மதிமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது: இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின்தலைமையில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சிஇடம்கொடுக்காது. நாங்கள் பக்க பலமாக இருப்போம். இந்தி, சமஸ்கிருத கனவை மறந்து விடுங்கள். துப்பாக்கி குண்டுகளுக்கே அஞ்சாமல் போராடி இந்தியை எதிர்த்து வந்து இருக்கிறோம்.
தமிழும், ஆங்கிலமும்தான்: குண்டுகள் வந்து பாய்ந்தபோதே அஞ்சாத கூட்டம், கோடிகளுக்கா பயப்பட போகிறது. தமிழகத்தில் தமிழும், ஆங்கிலமும் தான் என்ற நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது என்றார்.