சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இப்பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இவர்களை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பகல்12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளனர். வரும் 9-ம் தேதி தலைவராக முதல்வர் ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் காலியான துணை பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியான பெண் ஒருவரும் அன்றைய தினமே அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.