தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தொடரில் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதுழ. அதிமுக தரப்பில் எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டது. எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, ஆர்.பி. உதயக்குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அதிமுக கொறடா வேலுமணி, சபநாயாகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவ கூறியிருந்தார். ஆனால், இது குறித்து அவரது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் எதிர்கட்சி துணை தலைவராக சட்டப்பேரவைக்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரது இருக்கைக்கு அருகாமையிலேயே எதிர்கட்சி தலைவருக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் இடம் மாற்றி கொடுக்கப்படாததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இன்று நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்ளும் எஸ்பி வேலுமணி, தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இப்போது எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பதால் அவரது தரப்பில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டிருப்பதை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட இருக்கிறது. இருப்பினும் இந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளபோகிறது என்பதை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே திமுக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.