நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்வு? வாகன ஓட்டிகள் ஷாக்!

இந்தியாவில் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுக்கான கட்டணம் வரியாக அச்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதற்கான கட்டணங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் தற்போது தானியங்கி முறையில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படும் முறைக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய சுங்கக் கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஓவர்லோடு ஏற்றிவரும் கனரக வாகனங்களால் சாலைகளில் அதிக தேய்மானம் ஏற்படுவதால், கனரக வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கட்டணம் வசூலிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அதிக போக்குவரத்து நெரிசலுள்ள மாநில நெடுஞ்சாலைகளை மாநிலங்களிடமிருந்து கையகப்படுத்தி, 4 அல்லது 6 வழிச்சாலைகளை உருவாக்கவும், பின்னர் 12-13 ஆண்டுகளுக்குள் சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்பப் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.