தெஹ்ரான்: ஈரானின் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இவின் சிறையில் நடந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ளது இவின் சிறை. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகள் இங்கு அடைத்து வைக்கப்படுவர். இந்தச் சிறையில் அடைத்து வைக்கப்படுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாஷா அமினியின் இறப்பைத் தொடர்ந்து ஈரானில் எழுந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட பலரும் இந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இவின் சிறையில் ஏற்பட்ட மோதலில் தீ பிடித்ததாக ஈரான் அரசு தெரிவித்தது. இந்த தீவிபத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார்.
மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.