பிரிட்டன் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். இந்த நிலையில், செஃப் சஞ்சய் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் இணைந்து வீடியோ கால் பேசுவது போன்ற காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் செஃப் சஞ்சய் ரெய்னா வீடியோ காலில், “மாமா, நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்யப் போகிறேன்” என்று கேமராவை இடப்பக்கமாகத் திருப்ப… பிரிட்டன் பிரதமர் ரிஷி, “விஜய் மாமா எப்படி இருக்கிறீர்கள்” என்று நலம் விசாரிப்பதுடன், அவர் தங்கியிருக்கும் டௌனிங் தெருவுக்கு வந்தால் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுக்கிறார்.
மேலும், இங்கிலாந்தில் விசா தொடர்பான பிரச்னை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சஞ்சய் ரெய்னா, ரிஷி சுனக்குடனான வீடியோவுக்கு, “விசா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது” என்று கேப்ஷன் வைத்திருக்கிறார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் தங்களது முதல் அலைபேசி அழைப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வணிகம் குறித்து விவாதித்தனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடனான உரையாடலுக்குப் பிறகு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று ரிஷி சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன். இரு நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்த இருவரும் இணைந்து உழைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.