பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை… சர்வதேச அளவில் இப்படியொரு பாராட்டு!

மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், வெளியுறவுக் கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையான மிகவும் சிறப்பான நிலையை எட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவிலான உறவுகளை பலப்படுத்தி உள்நாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவரது கொள்கையில் முதன்மையானது இந்தியாவின் வளர்ச்சி (India First). அடுத்து ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான யோசனைகளை மேம்படுத்துதல் ஆகும். இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்றைய தினம் பாராட்டி பேசியது கவனம் பெற்றுள்ளது.

மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடி சிறந்த தேசப்பாற்றாளர். இவரது ஆட்சியின் கீழ் இந்தியா பல்வேறு வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை பாராட்டுக்குரியது. இந்தியா – ரஷ்யா இடையிலான நல்லுறவு சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இருதரப்பிற்கும் இடையில் எந்தவொரு நெருக்கடியான சூழலும் வந்தது இல்லை. பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு அளித்து செயல்பட்டு வருகிறோம். வருங்காலத்திலும் இது தொடரும் எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக பல்வேறு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையை புகழ்ந்து பேசியுள்ளனர். QUAD சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொரோனா பெருந்தொற்றை மிகவும் சிறப்பான முறையில் பிரதமர் மோடி கையாண்டார். இவரது வெற்றியானது மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் TIME இதழுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தைக்கு டீ விற்பதற்காக உதவிகள் செய்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்.

இன்று அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தலைவராக உள்ளார். இவரது எழுச்சி என்பது இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. வறுமையை ஒழித்தல், கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, க்ளீன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் சிறப்பான முன்னெடுப்புகள் ஆகும்.

இந்திய – ஜப்பானிய மருந்து நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டு நடந்த COP 26 மாநாட்டில் பேசிய இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை ஒரேவொரு நபர் மற்றவர்களை விட நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அவர் தனது சொந்த நாட்டிற்காக அளப்பரிய விஷயங்களை செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல. ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரேவொரு நரேந்திர மோடி எனப் புகழாரம் சூட்டினார்.

இதேபோல் பிரான்ஸ் நாட்டு அதிபர் எம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங், இஸ்ரேல் நாட்டு முன்னாள் பிரதமர் நஃப்டாலி பென்னட், வங்கதேச பிரதமர் ஷேக் அசீனா, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கயானா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுக் ஹில்டன் டாட், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், UNGA தலைவர் அப்துல்லா ஷாஹித், டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கையை வெகுவாக பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.