சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிர்பயா நிதி குறித்து பேசிய பாஜக கவுன்சிலரிடம், திமுக உறுப்பினர்கள் ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எப்போது ஒதுக்கப்படும்?’ என்று பதில் கேள்வி எழுப்பினர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (அக்.28) நடைபெய்ய மாமன்ற கூட்டத்தில் 134 வார்டு பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த, “மழைநீர் பணிகளை துரிதமாக மேற்கொள்வதுற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மாரத்தான் முறையில் நகரம் முழுதும் நடந்து வரும் பணிகளுக்கு முதல்வர், அமைச்சர்கள், மேயர், கமிஷனர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். நிர்பயா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியில் 16 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து முழுவதையும் மாநகராட்சி வெளியிட வேண்டும்” என்று பேசினார்.
உமா ஆனந்த் பேசும்போது ஆங்கிலத்தில் பேசியதால், திமுக கவுன்சிலர்கள் தமிழில் பேசி வலியுறுத்தினர். அப்போது, “நான் இந்தியில் பேசவில்லை. ஆங்கிலத்தில் தானே பேசுகிறேன்” என பதிலளித்தார். “பிரதமர் மோடி ஐ.நா சபையில் தமிழில் பேசும்போது, நீங்கள் தமிழில் பேச தயக்கம் காட்டுவது ஏன்?” என திமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், “மத்திய அரசு சென்னைக்கு நிதி ஒதுக்கியது குறித்து கேட்கிறீர்களே, முதலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்போது நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசிடம் கேட்டு சொல்லுங்கள்” என திமுக கவுன்சிலர்கள் கூறினர்.