வடமதுரை: அய்யலூர் பகுதியில், 4 வழிச்சாலை டிவைடரில் மாடுகளை கட்டி, மேய்ச்சலுக்கு விடுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பூ செடிகள் மற்றும் புற்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்தவர் தங்களது பசுமாடுகளை சாலையின் நடுவில் கட்டி வைத்து புற்களை மேய விடுகின்றனர்.
மேய்ச்சலின்போது, திடீரென சாலையில் பசு மாடுகள் இறங்கி விடுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவி வருகிறது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு டிவைடரில் மாடுகளை கட்டி மேய்ச்சலுக்கு விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.