பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஊட்டியில் உள்ள பழைமையான பள்ளிகளில் ஒன்றான பிரீக்ஸ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பள்ளிகளுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், குன்னூரில் இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் சாரண சாரணியர் இயக்கத்தின் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் சாரணர் உடை அணிந்து நிகழ்வில் பங்கேற்றார்.
பயிற்சி பெறுபவர்களிடம் பேசிய தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்பை வழங்கும் மனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியைச் சாரண சாரணியர் இயக்கம் செய்து வருகிறது. நேர்மை, தூய்மை, தொண்டு போன்றவையே இதன் அடிநாதமாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாக இருக்கும் இதில், சுமார் 50 கோடி பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். நமது தமிழகத்தைப் பொறுத்தவரைப் பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் சுமார் 4.15 லட்சம் பேர் உள்ளனர். இதை 10 லட்சம் பேராக உயர்த்த வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்கிறது.
இந்த இயக்கத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் நமது முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இங்குப் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்த சாரணர் பயிற்சி முகாம் தற்போது நமது அரசு மூலம் தொடங்கப்பட்டுள்ளது. சாரண சாரணியர்களுக்கான உடைகளை வழங்குவதற்கு அரசிடம் பரிந்துரை செய்து உரிய ஏற்பாடு செய்யப்படும். தூய்மையான மற்றும் நாட்டிற்குப் பங்களிப்பு செலுத்தும் மக்களை உருவாக்குவதில் இந்த இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வளர்ச்சிக்கு நமது அரசும் அனைத்து உதவிகளையும் செய்யும்” என்றார்.