எம்எல்ஏ பதவி போச்சு..! – சமாஜ்வாடி தலைவர் ஆசம் கான் தகுதி நீக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாடி கட்சி மூத்தத் தலைவர் ஆசம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்தக் கட்சியில், அகிலேஷ் யாதவுக்கு அடுத்தபடியாக நம்பர் 2 இடத்தில் இருப்பவர், மூத்தத் தலைவர் ஆசம் கான். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, உத்தர பிரதேச மாநிலத்தில் பேசிய ஆசம் கான், “நாட்டில் முஸ்லீம்கள் இருப்பதற்கு கடினமான சூழலை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி வருகிறார்” என பேசி இருந்தார். மேலும், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அவுஞ்சநேய குமார் சிங் ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பாஜக நிர்வாகிகள் ராம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் அவருக்கு இந்த வழக்கில் ஜாமினும் அளிக்கப்பட்டது.

அரசியல் அமைப்பு சட்டப்படி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதன்படி, எம்எல்ஏ பதவியில் இருந்து சமாஜ்வாடி மூத்தத் தலைவர் ஆசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்து உள்ளார். இதன் மூலம் அவர் எம்எல்ஏவாக இருந்த சுவார் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.