மத்திய பயோடெக் ரெகுலேட்டரின் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளின் உற்பத்திக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவு தெரிவித்து அரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் “கடுகு பயிரிடும் விவசாயிகள் இப்போது மாற்றத்தை விரும்புகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கடுகுகளை விளைவிப்பதன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெறலாம்” என்று கூறியுள்ளார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் வரலாறு, அவற்றின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அம்சத்தைப் பற்றிய மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (GEAC) சான்றிதழ் முடிவுகளை வைத்து, தொடர்ச்சியாக ராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பல நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ராப்விதை எண்ணெய் மற்றும் உணவைப் பொருள்கள் நுகர்வோர் பயன்படுத்தத் தகுந்தவை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உலகளவில் பல சான்றுகளையும் அவர் பதிவு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளார். அதோடு பர்னேஸ்/பார்ஸ்டார் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட ராப்விதை மற்றும் அதன் கலப்பினங்கள் 1996 முதல் கனடாவிலும், 2002 முதல் அமெரிக்காவிலும், 2007 முதல் ஆஸ்திரேலியாவிலும் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் சான்றுகள் பகிர்ந்துள்ளார். மேலும் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் இதனால் எந்த பாதிப்புகளும் கனடாவில் நிகழவில்லை என்றும் கனடா 7 மில்லியன் டன் ராப் விதைகளையும் 2.3 மில்லியன் டன் எண்ணெயையும் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ராகவன்பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுகளால் விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெறலாம் என்றும் இதற்கு அதிகமாகத் தண்ணீர், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என எதுவும் தேவைப்படாது என்றும் பதிவிட்டுள்ளார் .
விவசாய ஆர்வலர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு GEAC கடந்த அக்டோபர் 18 அன்று தனது அறிக்கையில், “அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து ஏதேனும் ஆதாரம் இருந்தால் ஒப்புதல் ரத்து செய்யப்படும் . மேலும் இந்த அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகள், சுற்றுச்சூழல், இயற்கை அல்லது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்தல் உள்ளிட்ட தீங்குகள் குறித்து ஏதேனும் சான்றுகள் இருந்தால், 1989 விதிகளின் விதி 13(2)ன் கீழ் ஒப்புதல் ரத்து செய்யப்படலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பயிர்த் தாவரங்களின் மரபணுக் கையாளுதல் மையத்தின் (CGMCP) விஞ்ஞானிகள் குழுவை வழிநடத்திய, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மரபியல் பேராசிரியரும் துணைவேந்தருமான தீபக் பெண்டலுக்கு, அக்டோபர் 25 அன்று மரபணு மாற்றம் செய்யப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய 16 விதிமுறைகள் பற்றி சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுகள் (DMH-11) தவிர ICAR- இன் மேற்பார்வையின் கீழ் புதிய கலப்பினங்கள் உருவாக்கவும் GEAC குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
மரபணு கலப்பினங்களுக்கு இந்தியாவில் எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் & ஹோலிஸ்டிக் அக்ரிகல்ச்சர் என்னும் நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியாவின் இயற்கை ஆர்வலர்களில் ஒருவருமான கவிதா குருகாந்தி, “மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் உயிரியல் மதிப்பீடு அறிவியல்பூர்வமற்றது மற்றும் எந்த வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. முறைகேடுகள் நடந்துள்ளன . சில சோதனைகளின் தேவை நியாயமற்ற கேள்விகள் எழுப்பப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்றும் இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.