Gujarat Bridge Collapse : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்… பாலத்தையும் பார்வையிட்டார்!

குஜராத்தின் மோர்பி நகரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்து, தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்துள்ளனர்.

இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. மோர்பி பாலம், விபத்து நிகழ்வதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜாராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக பாலத்தை திறந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த விபத்திற்கு தொடர்புடைய 9 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று குஜராத்திற்கு வருகை தந்தார். முதலில், விபத்து ஏற்பட்ட பாலத்தை பார்வையிட்டார். தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மோர்பி அரசு மருத்துவமனைக்கு சென்றார். 

அங்கு விபத்தில் காயமடைந்தவர்களிடம் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், விபத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரிடமும் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்க கூட்டத்தில் வலியுறுத்ப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,”கொடூர விபத்தைக் கண்ட மோர்பி நகருக்கு சென்றேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டேன் மற்றும் காயமடைந்தோர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கும் சென்றேன். மேலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து ஆய்வு கூட்டத்தையும் மேற்கொண்டேன்” என பதிவிட்டுள்ளார். 

பிரதமர் விபத்து ஏற்பட்ட பாலத்திற்கு வருகை தந்தபோது, பாலத்தை முறையாக சீரமைக்காமால் அவசர அவசரமாக திறந்த ‘ஓரிவா’ என்ற தனியார் நிறுவனத்தை பெயரை வெள்ளை திரைப்போட்டு மறைத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் பிரதமரின் வருகையொட்டி, காயமடைந்தவர்கள் இல்லாமல் புதியவர்களை மருத்துவமனையில் போலியாக அனுமதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

இதுவரை இந்த விபத்தில் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அந்த தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள்தான் என்றும், உயர்மட்ட அலுவலர்கள் யாரும் கைதாகவில்லை என்றும் கூறப்படுகிறது. ரூ. 12 – ரூ. 17 வரை டிக்கெட் கொடுத்து ஏறத்தாழ 400 பேரை ஒரே நேரத்தில் பாலத்தில் அனுமதித்ததாகவும், பழைய கயிறுகளை பழுது பார்க்காமல் மீண்டும் பாலத்தை திறந்தது போன்றவை விபத்து ஏற்பட முக்கிய காரணிகள் என கூறப்படுகிறது. 

அடுத்தாண்டு தொடக்கத்தில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த இந்த விபத்தை எதிர்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை கையில் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.