சென்னை: சென்னையில் 2,000 மின் ஊழியர்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் களத்தில் பணியாற்றி வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை, கே.கே.நகர் துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அங்கு உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு துணைமின் நிலையங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றி மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், பாதுகாப்பாக பணியாற்றிடவும் அறிவுரை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாம் கண்டயறியப்பட்டு இந்த ஆண்டு பாதிப்புகள் இல்லாத வகையில் அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 10 துணை மின் நிலையங்களில் உள்ள 16 மின்மாற்றிகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இப்பொழுது அந்த இடத்திலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சீரான மின்விநியோகம் செய்வதற்காக 2,700 பில்லர் பாக்ஸ் தரையிலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தி சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1,440 பேர் பணியிலும், இரவு நேரங்களில் 600 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையை இருக்கும் 1,800 பீடர்கள் மொத்தம் இருக்கு அதில் ஒன்று கூட மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படவில்லை. 100 சதவீதம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று இரவு மட்டும் இரண்டு இடங்களில் மின்விநியோகம் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
18,380 மின்மாற்றிகள் கையிருப்பு உள்ளன. 5000 கீ.மீ அளவிற்க்கு மின்கடத்திகள் கையிருப்பு உள்ளன. 1.5 லட்சம் மின்கம்பங்கள் உள்ளன கூடுதலாக 50,000 மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது. மின்விநியோகத்தை பொறுத்த வரைக்கும் தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
40,000 மின்கம்பங்கள் மழைக்கு முன்தாகவே தமிழ்நாடு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 31,500 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. மின்கம்பிகளை பொறுத்த வரைக்கும் 1,800 கீ.மீ அளவிற்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சீறிய பணிகளின் காரணமாக மின்விநியோகத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.