தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் மாடம்பாக்கம் அருகே ஆதனூர் பகுதியில் நண்பர் சத்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல், வெங்கடேசன் மீது மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வீசி உள்ளனர். இதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காமல் ஒரு நாட்டு வெடிகுண்டு மட்டும் வெடித்துள்ளது. இதனால் பதறிப்போன வெங்கடேசன் தப்பி ஓடியுள்ளார். அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்ற மர்மக்கும்பல் அரிவாளால் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் தலை, கழுத்து, உடல் ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவதால் மாடம்பாக்கம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த படுகொலை சம்பவமானது முன்விரோதம் காரணமாக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அதே பகுதியில் வசித்து வரும் வரும் சதாம் மற்றும் சதாமின் தம்பிகள் வெங்கடேசனை கொலை செய்ய முயற்சித்தனர். அப்பொழுது வெங்கடேசனுடன் இருந்தவர்கள் காப்பாற்றியதால் கை மற்றும் தலையில் வெட்டு காயங்களுடன் வெங்கடேசன் உயிர்த்தபினார் என்பது குறிப்பிடத்தக்கது.