சோழவந்தான் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில், ஐயப்ப சுவாமிக்கு வைகையாற்றில்  ஆராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக தென்கரை ஐயப்பன் கோயிலில், பரசுராம் சிவாச்சாரியார்  தலைமையில் யாக பூஜை நடைபெற்றது. பின்னர் செண்டை மேளம் முழங்க, யானை மீது ஐயப்பன் ஊர்வலமாக வைகையாற்றுக்கு வந்தார். அங்கு ஐயப்பனுக்கு 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ஐயப்ப பக்தர்கள் முன்னிலையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் சரண கோஷமிட்டனர்.

இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மீண்டும் யானை மீது ஊர்வலமாக கோயிலுக்கு ஐயப்பன் வந்தடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் சோழவந்தான் வைகையாற்றில் ஐயப்பனுக்கும் சிறப்பு பூஜைகளுடன், ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.