தெற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதிதீவிரமகா வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல் டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அதாவது நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 520 கிமீ தொலைவிலும் உள்ளது. கனமழை பெய்யும் பகுதிகளுக்கு 6 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களும் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் நாளை மொத்தம் 13 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
CS Mandous about 420km ESE of Karaikal,intensify into SCS by today https://t.co/sQp1nWKa2q move WNW, weaken into CS and cross north TN, Puducherry and south AP coast bw Puducherry and Sriharikota around Mahabalipuram as CS around midnight of 09 Dec pic.twitter.com/3kFlZ99Xtw
— India Meteorological Department (@Indiametdept) December 8, 2022
இரவு நேர பேருந்துகள் இயக்கப்படாது
இந்நிலையில், புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை:
நாளை மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை அதிக கன மழை பெய்யும் என்பதால் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை மறுநாள் (டிசம்பர் 10) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.