திருவனந்தபுரம்: சபரிமலையில் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதால் நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி 1,10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. கடந்த சில தினங்களாக சபரிமலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் நீண்ட நேரம் காத்துக்கிடப்பது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பக்தர்களுக்கும், போலீசுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளது. சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளதால் நெரிசலைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஒரு லட்சம் பக்தர்கள் வரும் நாட்களில் அஷ்டாபிஷேகம் உள்பட பூஜைகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும் என்றும், நெரிசல் ஏற்படாமல் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
முதல்வர் நாளை ஆலோசனை
இதற்கிடையே சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நாளை திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.