கம்பம்: நாராயணத்தேவன்பட்டியில் முன் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை உறுதி திட்டத்தின் கீழ் பழைய சுருளி அருவிக்கு செல்ல சாலை அமைக்க ரூ.4.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது சுமார் 800 மீட்டர் தொலைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் 30க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அகற்றி சாலை அமைக்க, நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு அனுமதி கடிதம் எழுதினார். அங்கிருந்து பதில் வருவதற்குள் நவம்பர் மாத கடைசி வாரத்தில் 20க்கும் மேலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது.இது குறித்து தகவலறிந்த நாராயணத்தேவன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று செய்தார். மேலும் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது குறித்தும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியனிடம் கேட்ட போது, அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே மரங்கள் வெட்டப்பட்டுள்ளது, இதுபற்றி முறையாக விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் செல்லையா கூறுகையில், ‘‘ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்து 10 நாட்களுக்கும் மேலாகியும் போலீசார் விசாரணை நடத்தவில்லை. சாலை அமைக்கும் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகிறது,.
சாலை அமைப்பதற்கு மரங்களை அகற்ற தேவை இல்லை. சில சமூக விரோதிகள் மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மேலும் முன் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டவர்கள் மீது முறையாக கோட்டாட்சியர் விசாரணைநடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.