இறவாக்காலம் குறித்து அஸ்வின் சரவணன் நம்பிக்கை

நயன்தாரா நடித்த மாயா என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய இவர் தற்போது மீண்டும் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதேசமயம் இந்த படத்திற்கு முன்னதாக அவர் எஸ்ஜே சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த அந்த படம் சில காரணங்களால் எப்போது ரிலீசாகும் என்பது தெரியாமல் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுபற்றி தற்போது அஸ்வின் சரவணன் கூறும்போது, “அந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. தயாரிப்பாளரும் படத்தை பார்த்து அவர்களுக்கும் திருப்தி தான். ஆனால் என்ன காரணத்தினால் இந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் எந்த ஒரு தனி மனிதரையும் குற்றம் சுமத்த முடியாது. இவ்வளவு நீண்ட நாட்களாக காத்திருப்பது மிகுந்த வலியை தருகிறது. ஆனால் என்றேனும் ஒருநாள் இந்த படம் தன்னுடைய பார்வையாளர்களை தேடி திரைக்கு வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.