திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கனூர் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர், நியாயவிலைக் கடையில் வழங்கப்பட உள்ள பொருட்களின் பட்டியல் குறித்த தகவலை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் “குருவப்ப நாயக்கனூர் ரேஷன்” என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை நிறுவியுள்ளார்.
இதன் மூலமாக என்னென்ன பொருட்கள் கடையில் தரப்படுகிறது, கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.
இதனால் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைப்பதால் நியாய விலைக் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை. இதுமட்டுமல்லாமல், முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள கூலித்தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு, காலநேர விரயம் ஏற்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.
இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வாட்ஸ்-அப் குருப்பை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் பொதுமக்களுக்கும் ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.