செல்போனை கீழே வைக்க முடியல: ஸ்டாலின் சொன்ன தகவல்!

தமிழகத்தை தாக்கிய மாண்டஸ் புயல் நேற்று முன் தினம் நள்ளிரவில் கரையை கடந்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய அளவிலான சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தென்காசி, மதுரை போன்ற மாவட்டங்களின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னைக்கு திரும்பிய முதல்வர் ஸ்டாலின், இரவோடு இரவாக கண்ட்ரோல் ரூமுக்கு நேரடியாகச் சென்று புயல் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தார். புயல் பாதித்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் தொடர்ப்பு கொண்டு நிலைமை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதன்பின்னர், சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கான நிவாரண உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிலையில், நேற்று முதல் மொபைலை கீழே வைக்க முடியவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற

நிர்வாகி இல்லத் திருமணத்தை தலைமையேற்றி நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ நம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தாக்கம் இருந்தது. அதிலிருந்து மீண்டோம். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்படவில்லை. முதலமைச்சரிலிருந்து அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டோம். அதனால், கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.

அது முடிவதற்கு முன்னாலேயே, வெள்ளம் வந்தது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்து அதிலும் வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. உழைப்பு… உழைப்பு… உழைப்பு‘தான் நம்முடைய மூலதனமாக இருக்க வேண்டும். அதைத்தான் ஸ்டாலினடத்தில் நான் பார்க்கிறேன் என்று கலைஞர் சொன்னார். எனவே அந்த உழைப்பை பயன்படுத்திதான், நான் மட்டுமல்ல, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல இந்த இயக்கம் வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு பணியாற்றுகிற ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்றியதால்தான் நாம் இன்றைக்கு கம்பீரமாக மக்களிடம் செல்ல முடிகிறது.

நேற்று முதல் மொபைலை கீழே வைக்க முடியவில்லை. சிறப்பாக செயல்பட்டதாக அனைவரும் பாராட்டுகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டு வருகிறது. இரண்டு நாட்களாக பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “‘நம்பர் ஒன்’ முதலமைச்சர் என்று பாராட்டுகிறார்கள். ஆனால், அதனை பெரிய பெருமையோ, பாராட்டாகவோ பார்க்கவில்லை. என்றைக்கு தமிழகம் நம்பர் ஒன் மாநிலம் என வருகிறதோ அன்று தான் பெருமை. அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நிச்சயம் அதனை நிறைவேற்றுவேன்.” என்று சூளுரைத்தார்.

மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஸ்டாலின், நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுகள். தமிழுக்குதான் தலைவர் கலைஞர் செம்மொழி என்கிற அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறார். எனவே, அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.