தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் ஜெயலலிதா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். இது அக்கட்சியினர் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு அளவே இல்லை.
முன்னதாக கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் மறைந்த தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவரது பெயரும் நீக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்து விட்டனர்.
இந்த வழக்கின்போது ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள் ஆகிய பொருட்களும் உள்ளன.
இந்த பொருட்களில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களுமே விரைவில் சேதம் அடையும் என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் உச்சநீதிமன்றத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கடிதம் அனுப்பினார்.
ஆனாலும் அது குறித்து எந்த பதிலையும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அந்த குறிப்பிட்ட பொருட்களும் இன்னமும் ஏலம் விடப்படாமல் தான் உள்ளது.
இந்த நிலையில் தான் தற்போது பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி 2வது முறையாக இதே கோரிக்கையை வலியுறுத்தி அதாவது ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அந்த 3 பொருட்களையும் ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், ‘ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சேலைகள், செருப்புகள், சால்வைகளை ஏலம் விடும் வரை நான் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி கொண்டு தான் இருப்பேன்’ என கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி குறிப்பிட்டு உள்ளபடி சேலைகள், செருப்புகள், சால்வைகள் விரைவில் சேதம் ஆகும் பொருட்கள் என்பதால் உச்ச நீதின்றமும் அதை ஏலம் விடும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.