நாகர்கோவில்: தேசிய கல்வி கொள்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது. நாகர்கோவில் பார்வதிபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பிரசார இயக்கம் தொடங்கியது. கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டோமினிக் ராஜ் தலைமை வகித்தார்.
பிரசாரத்தை நிறைவு செய்து, மாநில தலைவர் மணிமேகலை பேசியதாவது:
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அது பற்றி தேசிய கல்வி கொள்கையில் இல்லாதது இட ஒதுக்கீட்டு பிரிவினரின் கல்வி வாய்ப்பை மிக கடுமையாக பாதிக்கும். மும்மொழிக் கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு, தாய்மொழி வழி கல்வியை கேள்விக்குறியாக்கும். தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள், 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15 ஆயிரம் உயர் கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும்.
தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் காவி மய கொள்கையை ஒன்றிய அரசு புகுத்த நினைக்கிறது. கல்வியில் மதத்தை திணிக்க நினைக்கிறார்கள். பள்ளி பாட திட்டத்தின் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் தான் இருக்க வேண்டும். கல்விக்குள் மத சாயத்தை பூச நினைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இந்த கல்வி ெகாள்கை பேராபத்தானது. இதை மக்களுக்கு விளக்குவதற்காகவே இந்த பிரசார இயக்கத்தை நடத்துகிறோம் என்றார்.