பழநி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் நெல்லையில் இருந்து 61 கிமீ தூர ரயில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, நெல்லை பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு ஏழு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து இந்த ஏழு ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. தற்போது இப்பகுதியில் ரயில்கள் 70 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன.
ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, ரயில் பாதை பலப்படுத்தும் பணி நடந்தது. ரயில் வேக சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து நெல்லை – திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் ரயில்களை 110 கி.,மீ வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் இப்பகுதியில் ரயில்கள் 110 கி., மீ வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கோட்டை – கொல்லம், திண்டுக்கல் – பழனி – பொள்ளாச்சி, மதுரை – விருதுநகர் ரயில் பிரிவிலும், ரயில் நிலையங்களில் ரயில்கள் நேரடி ரயில் பாதையில் (Main line) இருந்து அருகிலுள்ள பாதையில் (Loop line) பயணிக்கும்போது, 15 கிமீ வேகத்திலிருந்து 30 கிமீ வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் குறையும் என, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.