நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே வீரசேகரன் என்பவர் தனது மனைவி திருமுருகப்பிரியா என்பவருடன் வசித்து வந்துள்ளார். திருமுருக பிரியா கர்ப்பமாக இருந்த நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை தொப்புள் கொடி சுற்றி இருந்ததால் அவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினார்கள். அங்கே இருந்த மருத்துவர்கள் சுகப்பிரசவம் ஆகும் என்று அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதித்துள்ளனர் அதன்பின் நிலைமை மோசமாக அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பின் குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர் இதை உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களது அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோய் விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த மருத்துவமனைக்கு வந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சை செய்ய கூறினோம். ரத்த அழுத்தம் உள்ளது .கொடி சுற்றியுள்ளது என்பது போல பிரச்சினைகள் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய சொல்லி கூறினோம். ஆனால் உங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் செய்ய முடியாது என்று அலட்சியமாக இருந்தார்கள்.
திரும்பத் திரும்ப கேட்டதற்கு எங்களை விரட்டி அடித்தனர். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி எந்த குழந்தையும் இதுபோல இறக்க கூடாது.”என்று தெரிவித்துள்ளனர்.