புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புயலால் பாதிப்பு வரக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன்னேற்பாடு காரணமாக பல பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. புயலால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். பலர் வாகனங்களை இழந்துள்ளனர். இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை
இந்தியா உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வழிகாட்டியாக திகழ்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கிரண் பேடியோடு ஒப்பிட்டு என்னை கூறி வருகிறார். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட நான் விரும்புவது இல்லை. ஆளுநர் பணியை தான் செய்கிறேன் அரசியல்வாதியாக செயல்படவில்லை.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது குறித்து தற்போது பதில் அளிக்க முடியாது. துணைநிலை ஆளுநரான நான் புதுச்சேரி அரசாங்கத்திற்கு மிகவும் துணையாக இருந்து வருகிறேன். தலைமையோடு இணைந்து பணியாற்றுவதனால் தான் ஆக்கபூர்வமான பணிகள் புதுச்சேரியில் செய்யப்பட்டு வருகிறது
தமிழகத்தில் மாண்டஸ் புயல் தொடர்பான நடவடிக்கையில் மற்ற மாநில ஆட்சி குறித்து கருத்து சொல்வது சரியில்லை ஆனாலும் உயிரிழப்புகள் இல்லாமல் காத்திருப்பது அவசியம். திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும். மாடல் என்பது தமிழா? அவர்கள் என்ன சொன்னாலும் அது தமிழ் வார்த்தையா? திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.