ஈரோடு கிழக்கு: ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு தருமாறு தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில்
காங்கிரஸ்
கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் சகோதரும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையிலும் திமுக அமைச்சர்கள் கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுகவிற்கு, முதல்வருக்கு காங்கிரஸ்காரன் என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி கட்சிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். திமுக தேர்தல் பிரச்சாத்தை தொடங்கி உள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்கள் வர வேண்டும். எனது குடும்பத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கட்சி கூறினால் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

வேறு சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அதிமுக நான்காக பிரிந்து உள்ளது. ஒற்றுமை அவர்களிடம் இல்லை. அதிமுக சேர்ந்து வந்தாலும், பிரிந்து வந்தாலும் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெரும்.” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.