கும்பகோணம் அருகே இரண்டு இடங்களில் மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பாலியல் தொழில் நடந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். பிரசித்தி பெற்ற கோயிலுக்கு அருகிலேயே மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில் நடந்து வந்தது தெரிந்து பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கும்பகோணம், திருவிடைமருதுார் பகுதிகளில் பாலியல் தொழில் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து போலீஸாருக்கு புகார் வந்திருக்கிறது. குறிப்பாக வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக போலீஸ் தரப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவிடைமருதூர் பகுதியிலுள்ள ஐந்துதலைப்பு வாய்க்கால் அருகில் மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்திருக்கின்றனர். அதனை போலீஸார் உறுதி செய்திருக்கின்றனர்.
இதையடுத்து, திருவிடைமருதுார் டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், நாகலட்சுமி உள்ளிட்ட போலீஸ் குழுவினர் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மசாஜ் சென்டரில் ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி அங்கு ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதே போல் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றுக்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கலர்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்திருக்கின்றனர். அதில் மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில் நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸ் டீம் கலர்ஸ் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். இதில் இரண்டு பெண்கள் உட்பட பாலியல் தொழிலுக்கு புரோக்கராக செயல்பட்ட இளைஞர் ஒருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட புரோக்கர் மணிகண்டன் (24) திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர். மசாஜ் சென்டர் பெயரில் விசிடிங் கார்டு அச்சடித்து வைத்திருந்த அவர் அதனை பலரிடம் கொடுத்திருக்கிறார். அத்துடன் பெண்களை மசாஜ் சென்டருக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார். பல ஆண்கள் அந்த மசாஜ் சென்டருக்கு வந்து சென்றிருக்கின்றனர். கோயில் நகரத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடைப்பெற்று வந்தது தெரிந்து பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையடுத்து, கும்பகோணம் மேற்கு மற்றும் திருவிடைமருதுார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மணிகண்டனை சிறையில் அடைத்ததுடன் பெண்கள் இருவரையும் தஞ்சாவூரில் உள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்துப் பேசிய டி.எஸ்.பி ஜாபர் சித்திக், “இரண்டு மசாஜ் சென்டர்களும் அதனை நடத்துவதற்கு உரிய அரசு அனுமதி பெறவில்லை. அத்துடன் ஆன்லைன் மூலம் பணம் வாங்கி கொண்டு பாலியல் தொழில் நடந்தி வந்திருக்கின்றனர். இது தொடர்பாக மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.