சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம், விமானத்தில் அவசர கால கதவைத் திறந்த விவகாரம் என விமானங்களில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்ற `ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் பயணி ஒருவர், விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தின் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் கத்திக் கத்திப் பேசுகிறார். விமான பணிப்பெண்ணும் தொடர்ந்து வாதிடுகிறார். அந்த நபரோடு இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார். விவாதம் அதிகரிக்க, சுற்றியிருந்த பயணிகளும், விமான அதிகாரிகளும் தடுக்க வருகின்றனர். பயணி, விமான பணிப்பெண்ணைத் தொட்டதால்தான், இந்த வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட பயணியை கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“டெல்லியில் ஏறும்போது, பயணி ஒருவர் கட்டுக்கடங்காமல், தகாத முறையில் நடந்து கொண்டு, விமான பணியாளர்களை தொந்தரவு செய்தார். குழுவினர் பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பயணியும் அவரின் சக பயணியும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டு, பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.