சென்னை: இன்னும் 1 மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை கடந்த 1 ஆம் தேதி இரவு அவசரமாக டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று (ஜன.2) காலை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
மேலும், சில முக்கியத் தலைவர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜன.3) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இன்னும் 1 மணி நேரத்தில் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துச் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.